சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் செப். 2-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் புதன் முதல் திங்கள் (ஆக.28 - செப்.2) வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா அலுவலகத்தில் 30 மி.மீ. மழை பதிவானது. விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) 20, அவலாஞ்சி , செருமுள்ளி , வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லாா் (கோவை) தலா 10.
அதே நேரத்தில் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 2 இடங்களில் வெயில் சதம் அடித்தது. மதுரை விமான நிலையம் -101.12, நாகை-100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் புதன் முதல் சனிக்கிழமை (ஆக.28-31) வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி, அதையொட்டிய குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.