நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்
கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரில் கைதான நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்.
கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு டிச. 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருள்களை சென்னை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கைதானவர்களின் செல்போன்களை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் மற்றும் முஹமது ரியாஸ் அலி, பைசல் அஹமது, சைய்யது சாஹி ஆகிய மூன்று பேர் கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் (வயது 26) உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், இவர்களிடம் விசாரணை நடத்தி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், துக்ளக் உள்பட 7 பேருக்கும் டிச. 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க | ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!