இயக்குநர் ஜெயபாரதி காலமானார்!
குடிசை திரைப்பட இயக்குநர் ஜெயபாரதி மறைவு பற்றி...
இயக்குநரும் எழுத்தாளருமான ஜெயபாரதி(வயது 77) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
குடிசை திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபாரதி, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி மூலம் குடிசை படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி. இந்தப் படத்துக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன.
தொடர்ந்து, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக 2010ஆம் ஆண்டில் புத்திரன் என்ற படத்தை இயக்கினார்.
புத்திரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இருப்பினும், தமிழக அரசின் மூன்று விருதுகளை இந்தப் படம் பெற்றது.
இவர் இயக்கிய நண்பா நண்பா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.