புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து!
மேம்பாலம் தற்போது சீரமைக்கப்பட்டதையடுத்து மீண்டும் போக்குவரத்து தொடக்கம்..
புதுச்சேரி - கடலூர் சாலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று போக்குவரத்து தொடங்கியது.
வங்கக்கடலில் நிலவிய ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
தொடர் மழையால் சாத்தனுார் அணை நிரம்பியதாலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.
இதனால் கடலுார் தென்பெண்ணை யாற்றில் கடந்த 2-ம் தேதி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூரை சுற்றியுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.
கனமழையால் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள இடையார்பாளைய மேம்பாலம் பழுதடைந்த நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
மக்களின் பாதுகாப்புக் கருதி கடந்த மூன்று நாள்களாக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பாலம் தற்போது சீரமைக்கப்பட்டதையடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.