அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே அரசமைப்பின் ஆன்மாவை தகர்ப்பதா? திருமாவளவன் பேச்சு
அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே அரசமைப்பின் ஆன்மாவை தகர்ப்பதா என திருமாவளவன் கேள்வி
புது தில்லி: புரட்சியாளர் அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே, அவர் உருவாக்கிய அரசமைப்பின் ஆன்மாவை தகர்க்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மக்களவையில் இன்று கூறினார்.
மக்களவையில் இன்று அரசமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், மத்திய அரசை குற்றம்சாட்டிப் பேசிக்கொண்டிருந்த போது அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மக்களவையில் இன்று உரையாற்றிய திருமாவளவன் பேசுகையில், அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் நிலையில், அதனைக் கொண்டாடும் வகையில் இந்த அவை இரண்டு நாள்களாக அதனை உருவாக்கிய அம்பேத்கரை போற்றிக்கொண்டிருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர், அல்லும் பகலும் உழைத்து ஒரு புதிய இந்தியாவை, சமத்துவ இந்தியாவை கட்டமைப்பதற்காக இந்த நாட்டுக்கு ஒரு அருள்கொடையாக வழங்கிய சட்டம்தான் இந்திய அரசமைப்புச் சட்டம்.
இது வெறும் சட்டம் மட்டுமல்ல, புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கான கோட்பாடும் ஆகும். அம்பேத்கரைப் பற்றி இங்கே பேசும்போது, அவரை எதிர்த்தது, அவருக்கு துரோகம் செய்தது என்பது போலதான் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறதே தவிர, எந்த அளவுக்கு இந்த 75 ஆண்டு காலத்தில் அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம், சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருக்கிறோம் என்பது பற்றி உரையாடல்கள் இல்லை என்பது வேதனையளிக்கிறது.
நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா என்ற கேள்விக்கு யார் விடை சொல்லப் போகிறார்கள், ஒருவேளை நாட்டை விட மத நம்பிக்கைகள் மேலானது என்று கருதினால், இந்த தேசம் மீண்டும் சுதந்திரத்தை இழக்க நேரிடும், இந்த தேசத்தின் சுதந்திரத்தை நாம் மீண்டும் வென்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்,
ஒரு பக்கம் அம்பேத்கரின் நினைவிடங்களை எல்லாம் மீட்டிருக்கிறீர்கள். அம்பேத்கர் புகழை பாடிக்கொண்டே, அவர் உருவாக்கிய அரசியலமைப்பின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்கிறீர்கள் என்றும் அது ஜனநாயகத்தின் ஆன்மாவை தகர்ப்பது போன்றது என்று திருமாவளவன் கூறினார்.
அவர் இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவைத் தலைவர், நீங்கள் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி அடுத்த மக்களவை உறுப்பினரை பேசுவதற்கு அழைத்துவிட்டார்.