தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று(திங்கள்கிழமை) நேரில் சந்தித்துப் பேசினார் .
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபென்ஜால் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் அவர் மனு அளித்துள்ளார்.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தவெக தலைவர் விஜய் 'திருக்குறள்' புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு ஆளுநர் 'பாரதியார் கவிதைகள்' தொகுப்பை விஜய்-க்கு வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | தமிழக ஆளுநருடன் விஜய் சந்திப்பு!
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
'தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?
ஆளுநரைச் சந்தித்தபிறகு நடிகர் விஜய், செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் தவிர்த்துவிட்டுச் சென்றார். பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.