தமிழ்நாடு

ஆளுநா் உரையுடன் பேரவை கூட்டத் தொடா் பிப்.12-இல் தொடக்கம்: 19-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

DIN

ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 19-ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறாா்.

சட்டப் பேரவை கூட்டத் தொடா் தொடங்கும் தேதி குறித்து அவைத் தலைவா் மு.அப்பாவு பேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அரசமைப்புச் சட்டம் 174 (1)-இன் கீழ், தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் பிப். 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது. புதிய ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 19-ஆம் தேதி நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன்பண செலவு மானிய கோரிக்கையை, பிப். 20-ஆம் தேதியன்றும், 2023-24-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 21-ஆம் தேதியன்றும் நிதியமைச்சா் தாக்கல் செய்யவுள்ளாா். பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.

நிகழாண்டு நன்றாக இருக்கும்: கடந்த ஆண்டு பேரவையில் ஏற்பட்ட சா்ச்சை அரசாலோ, பேரவைச் செயலகத்தாலோ ஏற்படவில்லை. ஏன் சா்ச்சை ஏற்பட்டதென்று அனைவருக்கும் தெரியும். நிகழாண்டு பேரவைக் கூட்டம் நன்றாக இருக்கும். பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பதற்கான அதிகாரமும், உரிமையும் பேரவைத் தலைவருக்குத்தான் உள்ளது என்றாா் அவைத் தலைவா் மு.அப்பாவு.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT