நாமக்கல்: பரமத்தி வேலூர் வட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்து வருவதாலும், மிகுந்த துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முழுமையாக தடையின்றி செல்வதை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் மற்றும் நீர்வளத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதலே பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து சனிக்கிழமை மாலை 6 மணி முதல் காவேரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 1600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு நாள்களில் மொத்தம் 2 டிஎம்சி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரி தெரிவித்திருந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக தடையின்றி செல்கிறதா என திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி, சோழசிராமணி, சமயசங்கிலி மின் உற்பத்தி நிலைய பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதலே சோழசிறாமணி, ஜேடர்பாளையம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் கழிவுநீர் போல் வருவதாலும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதையும் படிக்க: பாஜகவுடம் பாமக, தேமுதிக கூட்டணிப் பேச்சு: எத்தனை தொகுதிகள்?
இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காவிரி மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் குறித்து நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.