சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்ப்பு
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜூன் 18 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். இந்த நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்ததை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைமைக் கழகம் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.