ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதி!
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிபந்தனைகளுடன் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஃபாா்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தன.
இந்தப் பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த காா் பந்தயத்துக்கு தடை விதிக்கக் கோரி, மனுதாரர்கள் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
காா் பந்தயத்தின் போது ஏற்படும் ஒலியால் ஓமந்தூராா் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களுக்கு பாதிப்பு ஏற்படும். ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இருங்காட்டுக்கோட்டையில் சா்வதேச அளவிலான பந்தயத் தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்தப் பகுதியிலும் இந்த காா் பந்தயத்தை நடத்தக் கூடாது எனவும், இந்தப் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரியிருந்தனா்.
மேலும், இந்த பந்தயத்திற்கு தமிழக அரசு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு எவ்வித பலனும் இல்லை என்றும் மனுக்களில் கூறப்பட்டு இருந்தது. இதனிடையே மிக்ஜம் புயலால் பெய்த மழைக் காரணமாக ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், காா் பந்தயத்தின் போது ஏற்படும் ஒலியால் ஓமந்தூராா் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு வழங்கிய ரூ. 42 கோடியை அரசுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், பந்தயத்திற்கான முழு செலவையும் பந்தயம் நடத்தும் தனியார் நிறுவனமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.