சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியட்நாமின் வின் ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 16 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 409 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அதில், வின் ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.
இதற்காக அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பேரவைத் தலைவர் அப்பாவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கோ.லெட்சுமிபதி, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வின் ஃபாஸ்ட் நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.