மத்திய அரசு திட்டங்களால் மாபெரும் வளர்ச்சி: ஆனால் திட்டங்கள் மறைப்பு: பிரதமர் மோடி
மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் பிரதமர் மோடி
தூத்துக்குடி: மத்திய அரசின் திட்டங்களால், தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதற்கு தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெகுநேரம் கரகோஷம் எழுந்தது.
தூத்துக்குடியில் இன்று ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7,055.95 கோடி மதிப்பில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கும் திட்டம், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சி குறித்த என கோட்பாட்டை செய்தியாக வெளிவர தமிழக அரசு விடுவதில்லை. அதாவது, வளர்ச்சி குறித்த எனது கோட்பாடுகள், செய்தித் தாள்களில் செய்தியாக வெளிவரவிடாமல் தமிழக அரசு தடுக்கிறது. எனது கோட்பாடுகள் அனைத்தும் கட்சிக் கோட்பாடுகள் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோட்பாடுகள்தான்.
மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் மோடி. இதற்கு கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம் என்றார் பிரதமர் மோடி.
மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறியுள்ளது. தமிநாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது என்றார்.
ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தன் பயணத்தை தொடங்கவிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் நல்ல உறவு மேலும் உறுதியாகிவிருக்கிறது. என்னுடைய தொகுதியாக இருக்கும் காசிக்கு தமிழ்நாடு மக்கள் அளிக்கும் நான்கொடை இதுவாகும் என்று மோடி கூறினார்.