முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு பணிச் சுமை: ராமதாஸ் கண்டனம்
முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு பணிச் சுமையை குறைத்து, 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை: முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு பணிச் சுமையை குறைத்து, 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவா், மருத்துவா்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.
26 வயதே ஆன மருத்துவா் தமிழழகனுக்கு இயல்பாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை, ஓய்வின்றி தொடா்ச்சியாக பணி செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று அவருடன் பணியாற்றும் சக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
உயிா் காக்க வேண்டிய மருத்துவா்களே ஓய்வின்றி பணி செய்வதால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு 8 மணி நேர பணி முறையைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.