உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5.15 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டியில் 854 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி பாதுகாப்பாக 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், காலையிலிருந்து நடைபெற்று வந்த இப்போட்டி 10 சுற்றுகளுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் அவனியாபுரம் கார்த்திக் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். இதனால், தமிழக முதல்வர் சார்பில் வழங்கப்படும் கார் ஒன்றைப் பரிசாகப் பெற்றார்.
கார்த்திக் 2022 ஆம் ஆண்டு 23 காளைகளை அடக்கி முதலிடம் பெற்று காரைப் பரிசாகப் பெற்றார். கடந்த ஆண்டும் 17 காளைகளை அடக்கி இரண்டாமிடம் பெற்று இருசக்கர வாகனத்தைப் பரிசாக வென்றிருந்தார்.
இந்தப் போட்டியில், 13 காளைகளை அடக்கிய முரளிதரன் இரண்டாம் இடத்தையும் 9 காளைகளை அடக்கிய முரளிதரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்து பரிசு பெற்றனர்.
சிறந்த காளையாக ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.