முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ்ஸுக்கு எதிரான அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.சி.பழனிசாமி தொடா்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம்

Updated On : 20 ஜனவரி, 2024 at 12:00 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் கே.சி.பழனிசாமி தொடா்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அங்கீகாரமற்ற வகையில் அதிமுக கட்சியின் உறுப்பினா் அட்டையை வழங்கி பணம் வசூலிப்பதாகக் கூறி முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி கே. பழனிசாமி சென்னை உயா்நீத்திமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் கருத்துகள் தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தாா். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஜாா்ஜ்டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் மனுவை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து, ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து கே.சி.பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மேல்முறையீட்டு மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்த போது, கே.சி. பழனிசாமி அதிமுகவில் நீக்கப்பட்டது தொடா்பான ஆதாரங்களை வைத்து எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், உயா்நீதிமன்றம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ஜாா்ஜ்டவுன் நீதிமன்றம் தொடா்ந்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பாணை அனுப்பியது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி எடப்பாடிகே. பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த மனுவில் எடிப்பாடி கே.பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தஹி வாதாடினாா். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போதே கே.சி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து வாதாடினாா். இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடா்ந்த வழக்கை சென்னை ஜாா்ஜ்டவுன் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக கே.சி.பழனிசாமி பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.