முகப்பு
தமிழ்நாடு

இந்தியா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் கிடையாது: தொல். திருமாவளவன்

இந்தியா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

திருச்சி: இந்தியா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  "வெல்லும் சனநாயகம்" என்ற தலைப்பில் மாநாடு இன்று நடைபெறுகிறது. அதில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த மாநாட்டுக்கு சென்னையிலிருந்து சமத்துவ சுடர், தஞ்சையில் இருந்து சகோதரத்துவச் சுடர், மதுரை மேல வளைவிலிருந்து  சுதந்திர சுடர் ஆகிய மூன்று சுடர்களும் வரவுள்ளது.

மாநாட்டு மேடையில் இருந்து அனைத்து தலைவர்களும் ஜனநாயக சுடர்களை ஏந்துகின்றனர்.

இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும்  பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள்.   ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை அழித்து விடுவார்கள். தேர்தல் முறையே இல்லாமல் போய் தேர்தல் பழங்கனவாகிவிடும். ஆகவே ஜனநாயகத்தையும்  அரசியலமைப்பையும் சட்டத்தின் விளிம்புகளையும் காக்க இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள் தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது.

இந்தியா கூட்டணி சின்னச் சின்ன முரண்பாடுகளை கொண்டுதான் உள்ளது. அப்போதுதான்  கூட்டணி உறுதியாக இருக்கும். இந்த கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் தான் எவ்வளவு வலிமை மிக்கது என்பதை உணர முடியும் என்றார்.

சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அது என் சொந்த தொகுதி எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →