முகப்பு
தமிழ்நாடு

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு -உயர்நீதிமன்றம்

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதித்த தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்றம்

Updated On : 8 ஜூலை, 2024 at 9:00 AM
பகிர்:

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க தயாராக இருப்பதாக பிபிடிசி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில், இது தனிப்பட்ட தனியார் நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னை என்று வாதிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் அளிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.