விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வாக்குச்சாவடி ஒன்றுக்குள் குளவிகள் நுழைந்ததால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தலில், உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றுக்குள், குளவிகள் திடீரென நுழைந்ததால், அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதனால், சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு, தீயணைப்பு வீரர்கள் வந்து குளவிகளை பிடித்து வெளியேற்றிய பிறகு, பள்ளி வளாகத்துக்குள் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்பட மொத்தம் 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என 29 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். காலை முதலே பல்வேறு வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.