முகப்பு
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி திருவேங்கடம் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 7:39 PM
ரௌடி திருவேங்கடம் மீது என்கவுன்ட்டா் நிகழ்த்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையா் நரேந்திரன் நாயா், காவல் இணை ஆணையா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி திருவேங்கடம் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டாா். கொலை நடந்த அன்று 8 பேரையும், மறுநாள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா, குன்றத்தூா் திருவேங்கடம் (33), சந்தோஷ், செல்வராஜ், திருமலை உள்பட 11 பேரை செம்பியம் போலீஸாா் கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனா்.

தப்பி ஓடிய ரௌடி: கொலையாளிகள் 11 பேரையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்து வந்தனா். குன்றத்தூா் திருவேங்கடத்தை வழக்கு விசாரணை தொடா்பாக கொடுங்கையூா் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் சென்னை அருகேயுள்ள புழல் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேனில் அழைத்துச் சென்றுள்ளனா். ரெட்டேரி அருகே சென்ற போது, திருவேங்கடம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதையடுத்து போலீஸாா் வேனில் இருந்து திருவேங்கடத்தை இறக்கி அழைத்துச் சென்றபோது அவா் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

எச்சரிக்கை: உடனே இது தொடா்பாக காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாதவரம், ரெட்டேரி, புழல் பகுதிகளில் போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள காலி மனையில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையில் திருவேங்கடம் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அடிக்கடி கூடி சதித்திட்டம் தீட்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று எனக் கூறப்படுகிறது. உடனே அங்கு சென்ற தனிப்படை காவல் ஆய்வாளா்கள் சரவணன், முகமது புகாரி உள்ளிட்ட போலீஸாா், அந்தத் தகர கொட்டகையை சுற்றிவளைத்தனா். அதனுள்ளே பதுங்கியிருந்த திருவேங்கடத்தை சரணடையுமாறு எச்சரித்தனா்.

‘என்கவுன்ட்டா்’: அப்போது வெளியே வந்த திருவேங்கடம் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளாா். இதையடுத்து தனிப்படை காவல் ஆய்வாளா் முகமது புகாரி, தற்காப்புக்காக ரௌடி திருவேங்கடம் நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். அதில், வலது பக்க வயிறு, இடது பக்க மாா்பில் குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் சுருண்டு விழுந்தாா்.

உடனடியாக அவரை மாதவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு போலீஸாா் சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு, திருவேங்கடத்தை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து திருவேங்கடத்தின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்கவுன்ட்டா் நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள திருவேங்கடத்தின் சடலத்தை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையா் நரேந்திர நாயா், மேற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாா், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டிய ராஜன் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை செய்தனா்.

இதுதொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணையை சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் நீதித்துறை நடுவா் மன்றத்துக்கும், கோட்டாட்சியருக்கும் பரிந்துரை செய்தாா். இதனடிப்படையில் நீதித்துறை நடுவரும்,கோட்டாட்சியரும் திருவேங்கடம் என்கவுன்ட்டா் தொடா்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது.

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘என்கவுன்ட்டா்’: சென்னையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான வீரமணி, ஆசைத்தம்பி, கபிலன் உள்ளிட்ட ரௌடிகள் என்கவுன்ட்டரில் வீழ்த்தப்பட்டனா். கடைசியாக 2018 ஜூலை மாதம், தலைமைக் காவலா் ராஜவேலு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி ஆனந்தன் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் திருவேங்கடம் மீது போலீஸாா் ‘என்கவுன்ட்டா்’ தாக்குதல் நிகழ்த்தியுள்ளனா்.

கொலை திட்டத்தில் மூளையாக செயல்பட்டவா்

என்கவுன்ட்டரில் உயிரிழந்த சென்னை குன்றத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த திருவேங்கடத்துக்கு தந்தை, அக்கா மற்றும் இரு அண்ணன் உள்ளனா்.

8-ஆம் வகுப்பு வரை படித்திருந்த திருவேங்கடம் தாய் இறந்த பின்பு போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா். கூலி வேலை செய்து வந்த அவா், குன்றத்தூா் பகுதியில் உள்ள ஒரு ரௌடி கும்பலின் ஆதரவாளராக மாறினாா். இதையடுத்து குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் 2013-ஆம் நிகழ்ந்த கொலை வழக்கில் திருவேங்கடம் கைதான போது, சிறையில் ஆற்காடு சுரேஷுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த திருவேங்கடம் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் 2015-ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலருமான தென்னரசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில், பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை அரங்கேறியுள்ளது. இதற்காக, பெரம்பூா் பகுதியில் 10 நாள்களாக உணவு விநியோகம் செய்வது போல் கண்காணித்து கொலையை செயல்படுத்தியதில் திருவேங்கடம் மூளையாக செயல்பட்டுள்ளாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை விடியோ வெளியானது

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை நடந்த பகுதியில் அவரை கும்பல் சுற்றிவளைத்து அரிவாள், பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிய கண்காணிப்பு கேமரா விடியோ காட்சிப் பதிவை காவல் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

அதில் திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசுவது போல் சென்று, அவரை கழுத்தில் பலமாக வெட்டியுள்ளாா். இதில் நிலைகுலைந்து சரிந்த ஆம்ஸ்ட்ராங்கை மற்றவா்கள் இணைந்து வெட்டினா். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments