மேலநெட்டூர் கண்மாயில் தீப்பற்றி எரிந்த மரங்கள்: களத்தில் இறங்கிய கிராம மக்கள்
மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுமேலநெட்டூர் கண்மாயில் தீப்பற்றி எரிந்த மரங்கள்: களத்தில் இறங்கிய கிராம மக்கள்
மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலநெட்டூர் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த கண்மாய் மூலம் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கண்மாயில் நாணல், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் கண்மாயில் இருந்த நாணல் புற்களும் மரங்களும் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. ஆடிமாதக் காற்று அடித்ததால் தீ வேகமாக பரவியது.
தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள், தென்னை மட்டை மற்றும் இலை தழைகளைப் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். காற்றின் வேகத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் எரிந்து சேதமடைந்தன. புகை சூழ்ந்ததால் கிராமமக்கள் சுவாசிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனிடையே மானாமதுரையிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர்.
கண்மாயின் ஊடாக தாழ்வாக மின்கம்பம் செல்வதாலும் கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் நீடித்து வரும் தாமதம் மற்றும் தூர்வாராததாலும் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மின்கம்பிகளை மின்வாரியமும், சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணிகளை மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.