பி.இ.: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் பொறியியல் மாணவா்கள் சோ்க்கையில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 79,938 இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99,868 போ் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.
Advertisement
இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியானது. தொடா்ந்து முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 22-இல் தொடங்கி ஜூலை 27 வரை நடைபெற்றது.
சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், அதில் 836 இடங்களில் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 29) தொடங்கப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வு மூன்று சுற்றுகளாக நடைபெறவுள்ளன.
இதன் முதல் சுற்று கலந்தாய்வு ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் 26,654 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.
கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவா்கள் செயல்பட வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களைவலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.