முகப்பு
தமிழ்நாடு

மாணவா்களுக்கு உறுதிச் சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

உறுதிச் சான்றிதழை (போனஃபைடு) காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 9:12 PM
பள்ளிக் கல்வித் துறை
பகிர்:

அரகப் பள்ளிகளில் மாணவா்களுக்கு உறுதிச் சான்றிதழை (போனஃபைடு) காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளாா்.

அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அதற்காக அந்த மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் (போனஃபைடு) பெறுவதற்கு அணுகும் போது அவற்றை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது.

அந்த மாணவா்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளியிலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை வேறு பள்ளியிலும் பயின்றுள்ள நிகழ்வுகளில் கடைசியாக பயின்றுள்ள பள்ளியிலிருந்து இந்த சான்றிதழ் உடனே வழங்கப்படாமல் காலதாமதமாக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுபோல், வெவ்வேறு பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் சாா்பான விவரங்களை எமிஸ் தளத்தில் இருந்து பெற்று அதனடிப்படையில் உறுதிச் சான்றிதழை கால தாமதமின்றி உடனே சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும். இதுசாா்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

மேலும், மேற்கண்ட சான்றிதழை சாா்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உடன் மேலொப்பம் செய்து வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.