முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் மறைவு
நீலகிரி முன்னாள் எம்.பி.யான மாஸ்டர் மாதன் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் மாஸ்டர் மாதன் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
அவரது உடலுக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வந்தவர் மாஸ்டர் மாதன் (92).
Advertisement
Advertisement
நீலகிரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரான இவர், வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் காலமானார். இவருக்கு மனைவி சரஸ்வதி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவர் பாஜக சார்பில் 1998-99, 1999-2004 என இருமுறை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அஞ்சலி: மாஸ்டர் மாதன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலை வர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தகனம்: இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம், வண்ணாங்கோவில் பிரிவில் உள்ள நித்யானந்தா எரியூட்டு மயானத்தில் அவர் உடல் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்: முன்னாள் மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மாதன் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் 'எக்ஸ்' தளத்தில் கூறியிருப்பதாவது:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதன் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. சமூக சேவையில் அவரது அசாதாரண அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான அவரது இடைவிடாத முயற்சிகளும் நமது சமூகத்தில் அழியாத அடையாளத்தைப் பதித்துள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கு அவருடைய அர்ப்பணிப்பு காலம்தோறும் நினைவுகூரப்படும், என்றும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.