11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டவுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம் என நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டவுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம் என நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(29.07.2024) காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வறண்ட குட்டை போல காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்தது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.