வயநாடு விரைந்த தமிழக குழு: கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை
மாநில பேரிடர், தீயணைப்பு, மருத்துவர்கள் அடங்கிய 50 பேர் குழு வயநாடு சென்றடைந்தது.
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 50 பேர் கொண்ட இன்று அதிகாலை குழு கேரளம் சென்றடைந்தது.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கீ.சு.சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் தலைமையிலான குழு இன்று அதிகாலை 4 மணியளவில் வயநாடு சென்றடைந்தனர். அங்கு கேரள அதிகாரிகளுடன் மீட்புப் பணிகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள தீயணைப்பு துறை இயக்குநர் தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று காலை 10 மணியளவில் மீட்புப் பணிகளில் களமிறங்கவுள்ளனர்.
Advertisement
இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கோவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் நேற்று உரையாடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், கேரள அரசுக்கு நிவாரணமாக ரூ. 5 கோடி வழங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.