குட்டி யானையை தொடரும் சோகம்! கோவையில் யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க முயற்சி!
யானைக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
கோவை வனப்பகுதியில், தாயைப் பிரிந்த குட்டி ஆண் யானையை அதன் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு தீவிர முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.
இதன் இடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை அதன் கூட்டத்துடன் சென்றது. இதனை வனத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப் பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.
Advertisement
இந்த தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை நேற்று முதல் தாயுடன் சேர்க்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது. தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை.
இதனால் அதனை மீண்டும் தடாகம் பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்துடன் சேர்க்க வனத் துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று (08-06-2024) காலை 07 மணி முதல் மருதமலை அடிவார பகுதியில் யானை கூட்டம் ஒன்றினை வனத்துறையினர் கண்டுபிடித்தனர், அதனுடன் தாயை பிரிந்த அந்த குட்டி ஆண் யானையை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.