கோகுல்ராஜ் கொலை: யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க தமிழக அரசு மறுப்பு!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கத் தமிழக அரசு மறுப்பு.
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். விசாரணையில், காதல் விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா். இவர்களில் 2 பேர் விசாரணையின் போதே இறந்து விட்டனர்.
இந்த வழக்கில் யுவராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் யுவராஜின் கல்வித்தகுதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி யுவராஜின் மனைவி சுவிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனுவின் மீது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இதில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி பதில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு சிறை விதிகளுக்குட்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இதில், அவர் செய்துள்ள குற்றங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அத்துடன், கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்க சிறை விதிகளில் அனுமதியில்லை. எனவே, யுவராஜ் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்குமாறு உரிமை கோர முடியாது. ஆகையால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த மனுவின் மீதான விசாரணையை வருகிற ஜூன் 20-க்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.