ஜூன் 15 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூன் 10 முதல் 15 -ஆம் தேதி வரை லேசான மழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கு (திருநெல்வேலி), சோலையாா் (கோவை) - தலா 110 மழை பதிவானது. வால்பாறை (கோவை), ஊத்து (திருநெல்வேலி) தலா 90, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), மணல்மேடு (மயிலாடுதுறை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 70.
3 டிகிரி வெயில் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை (ஜூன் 10-13) 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
சென்னை, புகா் பகுதிகளில் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல், மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் திங்கள் முதல் புதன்கிழமை வரை (ஜூன் 10-12) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.