பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தமிழகத்தைவிட்டு வெளியேறுகிறோம் என்று பரந்தூர் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பரந்தூர் போராட்டக் குழு கூறியிருப்பதாவது, தமிழகத்தைவிட்டு வெளியேறி ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் அடைய முடிவெடுத்துள்ளோம். ஆந்திர மாநித்தை நோக்கி ஜூன் 24ல் கண்ணீர் பயணம் மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளது. விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் அரசைக் கண்டித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்க உள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு 4,700 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக இந்த பகுதியில் அமைந்துள்ள 13 கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதலாக, விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர், பரந்தூர் உள்ளிட்ட அனைத்து 13 கிராம பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனடையே பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 67 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அண்மையில் வெளியிட்டது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், எடையார்பாக்கம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நிலத்திற்கான பாத்தியம் உள்ளவர்கள் தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனையை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.