கள்ளச்சாராய சம்பவத்தில், ஒரு பாக்கெட்டுக்கும் மேல் குடித்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதாகவும் 3 பாக்கெட் குடித்தவர்கள் பலியாகியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் கவலைக்கிடமான நிலைக்குப் போகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 56 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியான 13 பேர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்குத் தூக்கி வந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
பலியானவர்களின் குடும்பத்தினர், தங்கள் வீட்டில் ஒருவர் வேலைக்குச் சென்றுவிட்டு கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தபிறகு வீட்டுக்கு வந்து உறங்கிய நிலையில், தொலைக்காட்சியில், கள்ளச்சாராய சம்பவம் குறித்து செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் வீட்டிலும் ஒருவர், கள்ளச்சாராயம் குடிப்பவர் ஆயிற்றே என்று அலறி அடித்துக்கொண்டு, அவர் ஏற்கனவேு இறந்துவிட்டதைக்கூட அறியாமல், அவர் உறங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்து மருத்துவமனைக்குத் தூக்கி வந்தனர். அவரைக் காப்பாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருந்தது நடக்காமல் போனதாகவும் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவமனைக் கல்லூரி, மருத்துவமனையில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. இங்கு கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 120 சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த 2023 மரக்காணம் சம்பவத்தின் போது, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததன் அனுபவத்தின் அடிப்படையில் தற்போது 120 பேரையும் கண்காணித்து வருகிறார்கள்.
ஜூன் 19ஆம் தேதி முதல் இந்த மருத்துவமனைக்கு திடீரென அதிகப்படியான நோயாளிகள் வந்து சேர்ந்தனர். இது மருத்துவமனையால் கையாள முடியாத அளவுக்குச் சென்றது. உடனடியாக பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் ஜிப்மருக்கும், சேலம் அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ஒரு பாக்கெட் சாராயம் குடித்தவர்களுக்கு உயிராபத்து ஏற்படவில்லை. 2 முதல் மூன்று பாக்கெட்டுகளைக் குடித்தவர்கள்தான் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து 18 மணி நேரத்துக்குள் சிகிச்சையளிக்காவிட்டால், அவர்களைக் காப்பாற்றுவது கடினமாகிறது என்கிறார்கள்.
மெத்தனால் எந்த வடிவில் இருந்தாலும் அதனைக் குடிக்கக் கூடாது, 10 மில்லி லிட்டர் மெத்தனால் கூட உயிரைக் கொன்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.