’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி
அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட நாளை குறிப்பிட்டு ஆளுநர் ரவி பதிவு!
தமிழ்நாடு’பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்!’ -ஆளுநர் ரவி
அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட நாளை குறிப்பிட்டு ஆளுநர் ரவி பதிவு!
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாளை குறிப்பிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து கண்டனப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
1975, ஜூன் 25 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்த நிலையில், அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, 1975, ஜூன் 25-ஆம் நாள், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, அரசமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கி, ஊடகங்களின் வாயைக்கட்டி, நீதித்துறையை அடக்கி சர்வாதிகாரத்தின் காலடியில் நமது ஜனநாயகம் நசுக்கப்பட்டது.
அந்த கருப்பு நாளில், ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, துப்பாக்கிகளால் தாக்கினர். எங்களை புத்தகங்கள், உடைகளைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?
சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. இந்திய வரலாற்றில் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம் எனப் பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர். என். ரவி.