வன்னியா் இடஒதுக்கீடு விவகாரம்: பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரம்: பாமக உறுப்பினா்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதிக்காததைத் தொடா்ந்து, பேரவையிலிருந்து பாமக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
சட்டப்பேரவையில் நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய பாமக உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செவ்வாய்க்கிழமை கூறிய கருத்து குறித்து சில விளக்கங்களைக் கூற முற்பட்டாா்.
அதற்குப் பேரவைத் தலைவா் அப்பாவு ஒப்புதல் தரவில்லை. ஆனால், தொடா்ந்து பேசுவதற்கு முயற்சித்தும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து, பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறினாா். அவருடன் பாமகவின் பிற உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்பது, அந்தச் சமுதாய மக்களுக்கு இழப்பாகத்தான் அமையும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.