மகாராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களுக்கான 5% இடஒதுக்கீடு ரத்து! எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மகாராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது குறித்து...
மகாராஷ்டிரத்தில், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான மாநில அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில், இதற்கு முந்தைய காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியில் மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், இஸ்லாமியர்களுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக, மகாராஷ்டிர மாநில அரசு செவ்வாய்க்கிழமை (பிப். 17) தீர்மானம் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, வெளியான அரசின் தீர்மானத்தில், புதிய விதிகளின்படி சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (ஏ) கீழ் சேர்க்கப்பட்டுள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியர்களுக்கு அரசு வேலைகள், அரசு சார்ந்த வேலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பான அனைத்து முந்தைய முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், முந்தைய முடிவுகள் மற்றும் 2014 ஆம் ஆண்டு வெளியான சுற்றறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன், சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் (ஏ) பிரிவின் கீழ் உள்ள இஸ்லாமியர்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும் என இந்தப் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஐந்து சதவீத இடஒதுக்கீடு குறித்த முந்தைய அவசர சட்டம் காலவதியானதால், இந்தப் புதிய தீர்மானம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தும், அதை மாநில அரசு முழுவதுமாகச் செயல்படுத்தவில்லை என மும்பை நகர காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரானது என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In Maharashtra, the BJP-led state government has revoked the 5 percent reservation given to Muslims.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.