கோவை: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்து- ஆசிரியை பலி!
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது: அதிகாலையில் பயங்கர விபத்து
கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று (புதன்கிழமை) காலை கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் அவர் பணியாற்றும் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை அனிதாவின் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி காலை 8.30 மணியளவில் மோதியது.
மோதிய வேகத்தில் ஆசிரியை தூக்கி வீசப்பட்டு சாலையின் நடுவே விழுந்தார். சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்த விபத்து அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பான நேரம் என்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என டிப்பர் லாரியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்திய காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.