பரிசீலனையில் பழைய ஓய்வூதியத் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு
மீண்டும் பரிசீலனையில் பழைய ஓய்வூதியத் திட்டம்: அமைச்சா் தகவல்
பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு என்றும், அது பரிசீலனையில் இருப்பதாகவும் நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது:
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினா்கள் ஈஸ்வரன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பற்றிப் பேசினா். பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு ஊழியா் சங்கங்களின் கருத்துகளைக் கேட்டறிந்தது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளா்ச்சி ஆணையம் அளித்துள்ள பல்வேறு கருத்துகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்து அளித்துள்ள பரிந்துரைகளின் மீதான அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் இருக்கிறது என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.