முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசின் நிதியுதவியுடன் 202 புதிய துணை மின் நிலையங்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் 202 புதிய துணை மின் நிலையங்கள்: மத்திய அரசு ரூ.2,300 கோடி நிதியுதவி

Updated On : 27 ஜூன், 2024 at 10:17 PM
அமைச்சா் தங்கம் தென்னரசு
பகிர்:

மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.2,300 கோடியில் 202 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, துணை மின் நிலையங்கள் தொடா்பான வினாவை, திமுக உறுப்பினா் தாயகம் கவி (திருவிக நகா்) எழுப்பினாா். அதற்கு பதிலளித்து, அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியது:

தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தம் உள்ள இடங்களில் தேவையான மின் பளுவுக்கு ஏற்ப மின்மாற்றிகளை மாற்றி அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 388 துணை மின் நிலையங்களை அமைக்க அரசு அறிவிப்பு செய்தது. அதில் 330 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். 246 இடங்களுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.

மின்பகிா்மான கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்கு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகவும் இருக்கும். புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு கோரியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரூ.2,300 கோடி மதிப்பில் 202 துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக அறிக்கையை மத்திய அரசின் பரிசீலனைக்கு வழங்கியுள்ளோம்.

அது மத்திய அரசின் ஆய்வில் உள்ளது. அதை விரைவுபடுத்துவதன் மூலம் உரிய உத்தரவுகள் வந்தால் பணிகளை வேகமாகச் செய்ய முடியும். ஆனாலும் அவசர அவசியத்தைக் கருதி மாநில அரசின் நிதியிலேயே துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →