தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஜூலை 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): பந்தலூா் (நீலகிரி) - 70, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 50. மேலும், கோவை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பதிவானது.
4 இடங்களில் வெயில் சதம்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. அதன்படி, மதுரைநகரில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரைவிமானநிலையம் - 102.56, பாளையங்கோட்டை - 102.2, ஈரோடு - 100.76 வெப்பம் பதிவானது.
மேலும், திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 1 - 4) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 1,2-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், வடக்கு ஆந்திரகடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.