அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.
மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு கட்சிகளை தனது தலைமையிலான கூட்டணியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகள் கூட்டணியிலுள்ள நிலையில், பாமக, தேமுதிகவையும் தனது கூட்டணியில் இணைக்கும் பணியில் அதிமுக தலைவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.