இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த நாள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தேர்தலில் வென்று மாநிலக் கட்சியான திமுக 1967-இல் ஆட்சி அமைத்தது. முதல்முறையாக தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.
இந்நிலையில், திமுகவின் முதல் அமைச்சரவை புகைப்படத்தை பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டதாவது:
“இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்.
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம். இன்று மொத்த இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையையும் பன்முகத் தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம். நாட்டைக் காப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.