ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் பற்றி...
வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிப்பையடுத்து கட்சிகளிடையே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது பிரசாரத்தை மயிலாப்பூரில் தொடங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற ஏப். 2 ஆம் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தனது தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.