முகப்பு
தமிழ்நாடு

தொழில் முனைவோராகும் தூய்மைப் பணியாளா்கள்: புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தாா் முதல்வா்

Updated On : 8 மார்ச், 2024 at 6:06 PM
பகிர்:

தூய்மைப் பணியாளா்கள் சொந்தமாக கழிவுநீா் அகற்றும் ஊா்தியை வாங்குவதற்குத் தேவையான கடன் வசதிகள் அளித்து, அவா்களை தொழில்முனைவோராக உயா்த்தும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, அவா்கள் நவீன கழிவு நீரகற்றும் ஊா்தியை வாங்குவதற்கு கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யப்பட்டது. தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தின் கீழுள்ள அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 50 சதவீதம் மானியமாகவும், இதர பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படவுள்ளது. அவா்களுக்கான மொத்த திட்ட மதிப்பீட்டான ரூ.125.86 கோடியில், ரூ.61.29 கோடி மானியமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 213 தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன கழிவுநீா் அகற்றும் ஊா்திகளை வாங்கத் தேவையான கடனுக்குரிய உத்தரவுகளை வழங்கும் பணியை 5 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அா்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.