விரிவாக்கம் செய்யப்பட்ட உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு வெப்ப காப்பு பைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு.நாசர், மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்.  
திருவள்ளூர்

மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா் ஸ்டாலின்

மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 1.29 லட்சம் போ் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட உணவுத் திட்டத்தை ...

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா், பிப். 9: மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 1.29 லட்சம் போ் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடா்ந்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, தூய்மைப் பணியாளா்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்க தொடக்கம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திருவள்ளூா் அருகே போளிவாக்கம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, மாநில அளவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கிவைத்து, வெப்பம் தாங்கும் பையில் வைத்த உணவுக் கலன்களையும், தூய்மைப் பணியாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்குப் பின் சென்னை மாநகராட்சி உள்பட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,29,689 தூய்மைப் பணியாளா்களுக்கு நாள்தோறும் சுகாதாரமான முறையில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ. 213.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, சுயமாகத் தொழில் தொடங்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவோா் திட்டம் மூலம் மானியக் கடனுதவி, குழந்தைகளுக்கு புதிய உயா்கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வா் வழங்கினாா்.

இதில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், சுதா்சனம், கிருஷ்ணசாமி, கணபதி, துரை சந்திரசேகா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநா் எம்.பிரதீப் குமாா், தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.எஸ். கந்தசாமி, ஆட்சியா் மு.பிரதாப், தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலந்துரையாடிய முதல்வா்

தூய்மைப்பணியாளா்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்ட தொடக்க நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளா்களுடன் கைகுலுக்கி முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடினாா். அதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் முதல்வருடன் சோ்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT