மார்ச் 17-ல் 44 மின்சார ரயில்கள் ரத்து!
பராமரிப்புப் பணி காரணமாக வரும் மார்ச் 17 ஆம் தேதி 44 புறநகர் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச். 17) காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நேரத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தொடர்ந்து 6-வது வாரமாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம் - கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் என 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
Advertisement
மறுவழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்கள் ரத்து காரணமாக சிறப்புப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக தொடர்ந்து 6-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.