வாக்கு எண்ணிக்கை; ஊறவைத்து ஊறுகாய் போட்டு......: மன்சூர் அலிகான்
டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாள்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வஉசி நகரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அங்கு கடைகளில் சென்று அமர்ந்து குழந்தைகளை கொஞ்சியும் மக்களிடையே தமக்கு ஆதரவு திரட்டினார்.
பின்னர் செய்தியாளர்ளுடன் அவர் பேசுகையில்,
"நான் நின்றால் மாநாடு , நடந்தால் ஊர்வலம் , படுத்தால் பந்த். எப்போது வேலூரில் இறங்கினேனோ அப்போதே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டேன்".
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு, "அவர்களிடம் போய் பேசி விட்டு வந்தேன். அது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை. நான் இங்கே வேலூரில் நிற்கிறேன்.
கொடுத்தால் இரட்டை இலை இல்லை இல்லையென்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. அவர்களை குறை சொல்லக்கூடாது, அது அம்மாவோட கட்சி தாய் கழகம்.
டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊறவைத்து ஊறுகாய் போட்டு 45 நாள்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா." என்று விமர்சனம் செய்தார்.