முகப்பு
தமிழ்நாடு

தமிழக எல்லைக்குள் நுழைந்ததாக கேரள விசைப்படகுகள் சிறைபிடிப்பு!

தூத்துக்குடி மீனவர்களின் எல்லைக்குள் நுழைந்ததாக கன்னியாகுமரி, கேரள விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச் 2024, 12:32 pm IST
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் இரவு நேரங்களில் மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகள், கேரளாவைச் சேர்ந்த ஒரு விசைப்படகு என 6 விசைப்படகுகளை தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு புதன்கிழமை காலை கொண்டு வந்தனர்.

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் கேரள மீனவர்கள் வந்து மீன்பிடித்துச் செல்வதால், காலையில் செல்லும் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனால், கடந்த 6 மாதங்களாக போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, கேரள மீனவர்களைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை முதல் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இது குறித்து படகு உரிமையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும், கூட்டத்தின் முடிவின்படி, மீன்வளத்துறையினர் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என தீர்மானித்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மேலும், இரவு நேரத்தில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் நுழைந்து மீன் பிடிக்கும் மீனவர்களை சிறைபிடிப்பதற்காக ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் இழுவை மடியை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 5 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 80 மீனவர்களையும் சிறைபிடித்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு புதன்கழமை அதிகாலை கொண்டு வந்தனர். சிறைபிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் 2 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸார், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்த தகவல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக சங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 85 மீனவர்களுடன் 6 விசைப்படகுகளை நடுக்கடலில் சிறைபிடித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.