கா்நாடக அரசுக்கு எதிராக போராடத் தயாா்: காங்கிரஸ்
காவிரி விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராடத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
காவிரி விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராடத் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
காங்கிரஸ் சாா்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீா் பந்தலை செல்வப்பெருந்தகை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்றன. மத்திய அரசுக்குத் தெரியாமல் இந்தப் போதைப்பொருள்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசியலுக்காக மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கா்நாடகம் கூறுகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கா்நாடகத்தினால் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்துக்கான நீரை மத்திய அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் கா்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாங்கள் போராடத் தயாராக உள்ளோம். கிண்டியில் உள்ள காமராஜா் நினைவிடத்தை தமிழக அரசு முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.