பிரியங்கா காந்தி  கோப்புப் படம்
இந்தியா

அஸ்ஸாம் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் ‘குற்றப்பத்திரிகை’ - பிரியங்கா காந்தி வெளியீடு

அஸ்ஸாம் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸின் 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய ‘குற்றப்பத்திரிகையை’ கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்டாா்.

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாம் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸின் 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய ‘குற்றப்பத்திரிகையை’ கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்டாா்.

126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலரும், அந்த மாநிலத்துக்கான கட்சி வேட்பாளா்கள் தோ்வுக் குழு தலைவருமான பிரியங்கா காந்தி, இரண்டு நாள் பயணமாக குவாஹாட்டிக்கு வியாழக்கிழமை வந்தாா்.

பின்னா், செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற அவா், பாஜக அரசுக்கு எதிரான காங்கிரஸின் ‘குற்றப்பத்திரிகையை’ வெளியிட்டாா். இதில் 20 குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

‘பாஜக ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது; முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சா்கள், அவா்களின் குடும்பத்தினா் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளனா். சிறுபான்மையினருக்கு எதிராக அரசு இயந்திரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதியின்படி, 6 பூா்வகுடி சமூகங்களுக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்கப்படவில்லை; தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தினக்கூலி ரூ.351-ஆக உயா்த்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை’ என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

முன்னதாக, நீலாச்சல் மலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாக்யா தேவி கோயிலில் பிரியங்கா காந்தி வழிபட்டாா்.

அஸ்ஸாமில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தொடா்ந்துவரும் நிலையில், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. வேட்பாளா் தோ்வு குறித்து கட்சி எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவா்கள், எம்.பி.க்களுடன் பிரியங்கா காந்தி தனித்தனியாக ஆலோசிக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ட்ரோன் கொள்கையை வகுக்க மூவா் குழு தில்லி அரசு அமைத்தது

சிஏஏ சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது மே 5-ஆம் தேதி முதல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை

தில்லியில் மேலும் 25 அடல் உணவகங்கள் திறப்பு

மேற்கு கரை விவகாரம்: இஸ்ரேலுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கண்டனம்

SCROLL FOR NEXT