அஸ்ஸாம் காவல்துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கேள்வி!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் பேசியது தொடர்பாக...
அஸ்ஸாம் காவல்துறை கமாண்டோ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் நேற்று (மார்ச் 22) மாநில காவல்துறை கமாண்டோ முகாம் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் படுகாயமடைந்தனர். தடை செய்யப்பட்ட உல்ஃபா (ஐ) பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தெரிவித்தார்.
இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் மாநிலத்தின் சட்ட - ஒழுங்கின் மீது கேள்வி எழுப்யுள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங், “இரு ஆண்டுகளுக்கும் முன்பு ஆகஸ்ட் 15 அன்று 22 வெடிகுண்டுகள் அஸ்ஸாமில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். அப்படி ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்காது.
இப்போது மாநிலத்தின் உள் பாதுகாப்புப் பற்றி பெரிய கேள்வி எழுந்துள்ளது. உங்கள் சொந்த மாநிலத்தைப் பாதுகாக்க முடியாமல், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடாமல், எந்த முகத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்று மக்களிடம் வாக்கு கேட்க முடிவு செய்துள்ளீர்கள்?
தற்போது உள்ள பெரிய ஆபத்து, மோசமான பாதுகாப்பு தான். நமது சொந்த மாநிலத்தைப் பாதுகாப்பதில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய செயல்பாடுகள் பற்றி மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் மதப் பிளவுவாதம் பேசுவது உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.