பாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அஸ்ஸாமுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா காந்தி, குவஹாத்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு வியாழக்கிழமை உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“அஸ்ஸாமில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறதா? பாஜக அரசு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆனால், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதா? குற்றம் அதிகரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது? எத்தனை பெண்கள் அவர்களின் சொந்த கால்களில் நிற்க உதவி வழங்கப்பட்டது?
மக்களின் கைகளில் உள்ள அனைத்து செல்வங்களும் இந்த மாநில ஆளுத்தை ஆளும் ஒரு குடும்பத்தின் கைகளுக்குச் செல்கின்றன" எனத் தெரிவித்தார்.
முன்னதாக அஸ்ஸாம் பாஜக அரசுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய “மக்கள் குற்றப்பத்திரிகை”யை பிரியங்கா காந்தி வெளியிட்டார்.
அஸ்ஸாம் மக்களின் பூர்வீக நிலங்களை பெரு நிறுவனங்களுக்கு அளித்ததாகவும், பொருளாதார முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.