கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை
கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்துள்ளது.
கத்திரி வெயில், மக்களை வாட்டி வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் திடீரென கருமேகம் சூழ்ந்து 30 நிமிடம் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கடும் கோடை வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி, சிறுவர் முதல் முதியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் அக்னி எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.
ஒரு சில இடங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசும் எனவும் கத்திரி வெயில் துவக்கத்தில் சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்திருந்தது.
Advertisement
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று லேசான மழை காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெய்தது.
இந் நிலையில் இன்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் லேசான மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச துவங்கியது. இதனைத் தொடர்ந்து 1 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்யத் துவங்கி மெல்ல மெல்ல கனமழையாக 30 நிமிடம் நீடித்தது.
திடீர் மழையை எதிர்பாராத வாகன ஓட்டிகள் மழையில் இருந்து விலகி சாலையோர கடைகள் குடியிருப்புப் பகுதிகள் என பல பகுதிகள் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ந்து 30 நிமிட மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணி துவக்கி உள்ள விவசாயிகளும் தங்களது விவசாய பணிகளை துவக்கி இருந்த நிலையில் இந்த மழை அவர்களுக்கு பெரிதும் உதவும் என்பதால் மகிழ்ச்சியடைந்தனர்.